இந்தியாவின் குஜராத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான் (படம்) என்ற 19 வயது கல்லூரி மாணவி உண்மையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தற் கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி, 55, வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் தாக்குதல் தொடர்பில் 35 ஆண்டுகள் தண்டனை பெற்று அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெட்லி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் காணொளி வழியாக நேற்று மூன்றாவது நாளாக வாக்குமூலம் அளித்தான்.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்திற்கு அம்மாநிலத்தின் அப்போதைய முதல்வரும் இப்போதைய இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடிதான் காரணம் எனக் கூறி, அவரைக் கொல்ல மேலும் மூவருடன் இணைந்து இஸ்ரத் திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இஸ்ரத், ஜாவேத் ஷேக், ஸீஷன் ஜோகர், அம்ஜத் அலி ராணா ஆகிய நால்வரையும் குஜராத் போலிசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ஆனால், இது ஒரு போலி என்கவுன்டர் என்று 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசாங்கம் மேல்முறையீடு செய்தது.