பொங்கோல் வாக் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியிலிருந்து குதித்துவிடப்போவதாக மிரட்டிய ஆடவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் அந்த வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாடியிலிருந்து குதித்துவிடப்போவதாக மிரட்டிய ஆடவரைச் சாந்தப்படுத்தி அவரது மனதை மாற்ற அதிகாரிகள் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குக் கடுமையாகப் போராடினர்.
சம்பவத்தின்போது அந்த ஆடவர் கத்தி ஒன்றை ஏந்திக்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. நேற்றுப் பிற்பகல் 2.30 மணி அளவில் சம்பவம் குறித்து அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த ஆடவர் இருந்த வீட்டின் சன்னலுக்குக் கீழே உயிர்க் காப்பு விரிப்புகள் போடப்பட்டன. புளோக்குக்குக் கீழ் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. ஆடவர் இருந்த வீட்டின் சன்னல் விளிம்புகளில் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தயார்நிலையில் இருந்தனர். இறுதியில், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பொங்கோல் வாக் வட்டாரத்தில் மாடியிலிருந்து குதித்துவிடப்போவதாக மிரட்டல் விடுத்த ஆடவர் இருந்த வீட்டுக்கு கீழே உள்ள வீட்டின் சன்னல் அருகில் பாதுகாப்பு வலையை விரிக்கும் அதிகாரி (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்