ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அலமர்ஹம் சுல்தான் இஸ்கந்தர் நேற்று ஜோகூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து செகாமட் நிலையத்துக்கு ரயிலை ஓட்டிச் சென்றார். ஒன்பதாவது முறையாக ரயிலின் ஓட்டுநர் இருக்கையை அலங்கரித்த அவர் நேற்று 180 கிமீ. தூரத்துக்கு ரயிலை ஓட்டிச் சென்றார். இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அவர் ரயிலை ஓட்டியதாக பெர்னாமா தெரிவித்தது. ரயில் வண்டியை இயக்கத் தேவையான 26வது பிரிவுக்கான ஓட்டுநர் உரிமத்தை 2010ஆம் ஆண்டு சுல்தான் பெற்றதாகவும் கூறப்பட்டது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆறு பெட்டிகளைக் கொண்ட ரயில் வண்டியை நேற்று அவர் ஓட்டினார். வழியில் எட்டு நிலையங்களைக் கடந்து ஐந்து மணி நேரப் பயணத்திற்குப் பிறகு அந்தப் பயணம் முடிவுறும் என பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. தற்போது செயல்பாட்டில் இல்லாத தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திலிருந்து 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி கிளம்பிய கடைசி ரயிலை ஜோகூர் சுல்தான் ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.