கேப்டவுன்: அணித் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் (படம்) பொறுப்புடன் ஆடி சதமடித்து கடைசி வரை களத்தில் இருந்ததால் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது, கடைசி ஒருநாள் போட்டியை வென்று, 3=2 என தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடரை ஏற்கெனவே இழந்திருந்த நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோற்றதால் தென்னாப்பிரிக்க அணியின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்நிலையில், அடுத்த இரு போட்டிகளிலும் அவ்வணியினர் துடிப்புடன் ஆடி வெற்றிப் பாதைக்குத் திரும்பினர். இதையடுத்து, 2=2 எனத் தொடர் சமனான நிலையில் நேற்று முன்தினம் நடந்த கடைசி ஆட்டம் இரு தரப்பிற்குமே மிக முக்கியமானதாக விளங்கியது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தபோதும் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மட்டும் நிதானமாக ஆடி சதமடித்தார். அவர் 112 ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில், அந்த அணி 45 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 22 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தத்தளித்தது. ஆயினும், டி வில்லியர்ஸ் (101*)=ஹசிம் ஆம்லா (59) இணை சரிவைத் தடுக்க, அந்த அணிக்கு வெற்றி புலப்பட்டது. பின்னர் வந்த டேவிட் வீஸ அதிரடியாக ஆடி 41 ஓட்டங்களை விளாச, தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது.