வனிதா மணியரசு
நவீனத்தையும் தொழில்நுட்பத்தையும் மேடை நாடகத்திலும் வித்தியாசமாகப் பயன்படுத்தலாம் என்பதை மெய்ப்பித்துள்ளது உத்ரா 2016. ஈராண்டுகளுக்கு ஒரு முறை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் உத்ரா எனும் கலைநிகழ்ச்சியின் மூன்றாவது படைப்பு இம்மாதம் ஆறாம் தேதி மேடையேறியது. கதை, வசனம், நடிகர்கள், நடனங்கள், ஆடைகள், ஒப்பனை, ஒளி, உபகரணங்கள் என உத்ரா 2016ன் ஒவ்வோர் அங்கமும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க, இரண்டரை மணி நேரம் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்கள் நாடகத்தைக் கண்டு ரசித்ததே மாணவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.
புலிப்புரம் என்ற கற்பனை உலகத்தை உருவாக்கி தொழில்நுட்பக் கூறுகளான 'எல்.ஈ.டி' நடனம், 'டிரோன்' சாகசம், பாரம்பரிய அம்சங்களான பரதம், நாட்டுப்புற கானா பாடல் போன்றவற்றை ஒரே மேடையில் அரங்கேற்றியது உத்ரா. "பார்வையாளர்களைப் பாத்திரங்களாக்கிய உத்ரா நாடகப் படைப்பில், நிகழ்ச்சிக்கு வந்தோர் புலிப்புரத்தாராகவே வரவேற்கப்பட்டதுடன், நாடகத்தின் முடிவை நிர்ணயிக்கும் பொறுப்பும் அவர்களிடமே விடப்பட்டது," என்றார் உத்ராவின் புத்தாக்க இயக்குநர் அருண் வாசுதேவ் கிருஷ்ணன். கருணை, நீதி போன்ற ஆழ்ந்த கருக்களை உள்ளடக்கி, மக்களின் சிந்தனைகளும் உணர்ச்சி களும் எழுச்சி காணும் தளமாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டிருந்தது இதற்கு வசனங்கள் எழுதிய குழு. அழகிய தமிழ் நடையில் அமைக்கப்பட்ட வசனங்கள் எளிதாகப் புரியக்கூடியவையாகவும் இருந்தன.
உணர்ச்சிபூர்வமாக நடித்துப் பார்வையாளர்களைக் கவர்ந்த கதாபாத்திரங்கள். படம்: கர்ணன் பாலகிருஷ்ணன்