ரிப்பப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரியின் இந்திய கலாசார மன்றம் 2009ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடத்திவரும் நாடக நிகழ்ச்சியான 'நக்ஷத்திரா'வில் இவ்வாண்டு 'அபாயம்' எனும் நகைச்சுவை கலந்த மர்ம நாடகம் அரங்கேற்றப்பட்டது. எழுத்திலிருந்து இயக்கம் வரை இப்படைப்பின் ஒவ்வொரு அம்சமும் பள்ளி ஆலோசகர்கள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்திய கலாசார மன்றத்தின் மாணவத் தலைவரான வினோதினி செல்வம் இயக்கிய இந்நாடகம், இம்மாதம் 6ஆம் தேதி பிற்பகல், இரவுக் காட்சிகள் மூலம் சுமார் 600 பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாடகத்தில் பங்கெடுத்த 63 மாணவர்களில் 25 பேர் முன்னாள் மாணவர்கள். கதாபாத்திரங்களாக மட்டுமின்றி மேடை பின்புற உதவி, ஒளி விளக்குகளை இயக்குவது, ஒலி, மேடை, ஆடை, பல்லூடக நிர்வாகம் எனப் பலதரப்பட்ட பணிகளை மாணவர்கள் மேற் கொண்டனர்.
பயந்ததுபோல் நடித்து சிரிக்க வைத்த கதாபாத்திரங்கள். படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி