சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக் கழகத்தின் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார் ஜார்ஜி கொட்சாகா, 32, எனும் ரஷ்ய ஆடவர். கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி 'இ-லேர்ன்' முறை மூலமாக நடந்த 'சொத்துச் சட்டம்' பாடத்திற்கான இறுதித் தேர்வை கொட்சாகா உட்பட மொத்தம் 19 பேர் எழுதினர். இதில் பல கேள்விகள் விடையளிக்கக் கடினமாக இருந்ததை உணர்ந்தார் கொட்சாகா. தேர்வு முடிந்தபிறகு தமது ஐஃபோன் மூலம் 'இ-லேர்ன்' பயிற்றுநரான பேராசிரியர் டாங் வாங் வூவின் கணக்கைப் பயன்படுத்தி மற்றொரு மாணவரின் விடைத்தாளை அவர் பார்த்துள்ளார். இதையடுத்து, தாம் சரியாகத் தேர்வெழுதவில்லை என எண்ணி, எல்லா மாணவர்களின் விடைத் தாள்களையும் கணினியில் இருந்து அழித்துவிட்டார்.
ஆனால், பல்கலைக் கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அமைப்பு அந்தந்த நேரத்தில் தகவல்களைக் காப்புநகல் (Back-up) எடுத்து விடும் என்பதால் அந்த விடைத்தாள்கள் மீட்கப்பட்டன. தாம் இன்னும் தேர்வெழுதவில்லை என்று கணினித் தகவல் காட்டுவதாக ஒரு மாணவர் மின்னஞ்சல் அனுப்பியதைத் தொடர்ந்து கொட்சாகாவின் குட்டு வெளியானது. குற்றத்தை ஒப்புக்கொண்ட கொட்சாகாவிற்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.