டாக்சி ஓட்டியைத் தாக்கியதற்காக நார்வே நாட்டு ஆடவருக்குப் பத்து மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் மறுவிசாரணைக்குப் பின் அவருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் அவர் அனுபவித்து விட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 1 மணி அளவில், நார்த் கெனால் ரோடு=சர்க்குலர் ரோடு சந்திப்பில், சான் சுவான் ஹெங், 47, எனும் டாக்சி ஓட்டியைத் தாக்கியதை ஒப்புக்கொண்டார் சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஆர்ன் கார்னெலியூசன், 51. என்ன நடந்தது என்பதை முழுமையாக நினைவில் வைத்திராத ஆர்ன், இழப்பீடாக சானுக்கு $30,000 வழங்கியுள்ளார். மேலும், பன்னாட்டுத் தளவாட நிறுவனத்தில் திட்ட நிர்வாக இயக்குநராக இருந்த அவருக்கு வேலையும் பறிபோனது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைச் செய்தித் தாள் மூலம் அறிந்தனர் சம்பவத்தை நேரில் பார்த்த இருவர். ஆர்ன்=சானுக்கு இடையிலான சண்டையின்போது சான்தான் சண்டையை மூட்டியது என்ற உண்மையைச் சொல்லும் பொருட்டு சாட்சியம் அளிக்க அவர்கள் தாமாக முன்வந்தனர். இதனையடுத்து, வழக்கில் மறுவிசாரணை கோரினார் ஆர்ன். காயம் விளைவித்தது, போலிசிடம் பொய் கூறியது ஆகிய குற்றச்சாட்டுகளை டாக்சி ஓட்டி சான் எதிர்நோக்கியுள்ளார்.