சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த ஆய்வு ஏதும் செய்யப்படாமல் சில மலேசிய திட்டங்களுக்காக ஜோகூர் நீரிணையில் நில மீட்புப் பணிகள் தொடங்கியிருப்பது குறித்து சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளது. சுற்றுப்புற, நீர்வள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. சில சமயம் சுற்றுசூழல் பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டபோதும் அந்த அறிக்கைகள் அனைத்தும் சிங்கப்பூருடன் பகிர்ந்துகொள்ளப்பட வில்லை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
நில மீட்புப் பணிகளை உள்ளடக்கிய ஜோகூர் மேம்பாட்டுப் பணிகள் இதுவரை சிங்கப்பூரை பாதிக்கவில்லை என்றும் அது சிங்கப்பூருக்குப் பங்கம் விளைவிக்காது என்றும் மலேசியாவின் இயற்கை வள, சுற்றுப்புற அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர் இம்மாதம் 4ம் தேதி கூறியிருந்தார். எனினும் சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தான் பல முறை அதன் கவலைகளை மலேசியாவிடம் தெரிவித்துள்ளது என்றது.