பாரிஸ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) காற்பந்துக் குழு 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி குழுவைத் தோற்கடித்தது.
இந்தத் தோல்வி வேண்டாத முடிவுதான் என்றாலும் எதிரணி அரங்கில் ஒரு கோல் அடித்தது ஆறுதல் அளிப்பதாக செல்சி நிர் வாகி ஹிட்டிங்க் தெரிவித்தார். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் 'ஃப்ரீ கிக்' மூலம் பிஎஸ்ஜியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச் உதைத்த பந்து செல்சி வீரர் ஜான் ஓபி மிக்கெலின் கால்களில் பட்டுத் திரும்பி வலைக்குள் தஞ்சமடைந்தது. தமது இந்தத் தவற்றுக்கு முற்பாதியின் கூடுதல் நேரத்தில் கோலடித்து ஆறுதல் தேடிக் கொண்டார் மிக்கெல். இருப்பினும், இரண்டாம் பாதி யில் மாற்று வீரராக வந்த எடின்சன் கவானி 78வது நிமிடத்தில் கோல் போட்டு பிஎஸ்ஜியை வெற்றி பெறச் செய்தார். செல்சி குழுவின் இடைக்கால நிர்வாகியாக ஹிட்டிங்க் 2ஆம் முறையாகப் பொறுப்பேற்றபின் அக்குழு அடைந்த முதல் தோல்வி இதுதான்.
ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்தபோது பிஎஸ்ஜி குழுவின் வெற்றி கோலை அடிக்கும் உருகுவே ஆட்டக்காரர் எடின்சன் கவானி (வலது). படம்: ராய்ட்டர்ஸ்