இஸ்தான்புல்: துருக்கியின் தலைநகர் அங்காராவில் ராணுவப் பேருந்துக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகளில் இருந்து அந்தத் தாக்குதலைச் சிரிய நாட்டவர் மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந் தத் தகவலை அரசுக்குச் சார்பான யேனி சஃபாக் நாளிதழ் நேற்றுத் தெரிவித்தது. நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 61 பேர் காயமுற்றனர். இந்த வெடிகுண்டுச் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சலி நெகார் எனும் அந்த நபர் சிரிய அகதிகளுடன் சேர்ந்து துருக்கிக்குள் நுழைந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. துருக்கிய நாடாளுமன்றம், ராணுவத் தலைமையகம், பிற அரசாங்கக் கட்டடங்கள் ஆகிய வற்றுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார், மேற்கு துருக்கிய நகரான இஸ்மிரில் இரு வாரங்களுக்கு முன்பாக வாடகைக்கு எடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
துருக்கிய நாடாளுமன்றத்துக்கு வெளியே ராணுவப் பேருந்துக்கு அருகில் நடத்தப்பட்ட கார்குண்டுத் தாக்குதலினால் கொழுந்துவிட்டெறிந்த தீயை அணைக்கப் போராடும் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்