இந்திய ஆண்கள் வெற்றி, பெண்கள் தோல்வி ஹைதராபாத்: ஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் வெற்றியாளர் கிண்ணப் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் மொத்தம் 14 அணிகள் கலந்துகொண்டுள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்ற இந்திய ஆண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை எளிதில் தோற்கடித்துக் கால் இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-17 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூவெய் டியானைத் தோற்கடித்தார். மற்றோர் ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 25வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 22=20, 15=21, 21=18 என்ற செட் கணக்கில் 11வது இடத்தில் உள்ள சீன வீரர் ஷெளங் மிங் வாங்கை சாய்த்தார். இதே போல் இந்திய வீரர் பிரனாய் 21=14, 21=10 என்ற நேர்செட்டில் யுகி ஷியை (சீனா) எளிதில் தோற்கடித்தார். ஒற்றையர் பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, இரட்டையர் பிரிவில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணி 3=2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி 2வது வெற்றியைச் சுவைத்தது. பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஜப்பான் 5-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஊதித்தள்ளியது.