சுதாஸகி ராமன்
பொங்கல் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைக்கும் விதமாக லிஷா எனும் லிட்டில் இந்தியா மரபுடைமை நிலையம் நேற்று ஏற்பாடு செய்த மருதாணிப் போட்டியில் கலந்துகொண்ட 19 பேரில் தனித்து நின்றார் 41 திரு பெலி சியோ டாய். அவர் போட்டியில் கலந்துகொண்ட ஒரே ஆடவர் என்பது மட்டுமல்ல அவர் ஒரு சீனர் என்பதால் அவர் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
பச்சை குத்திக்கொள்வதில் ஆர்வம் கொண்ட திரு பெலி சியோ டாய் இந்திய பாரம்பரிய மருதாணி ஓவியக் கலையால் ஈர்க்கப்பட்டு அதனை சுயமாகவே கற்றுக்கொண்டார். சைனாடவுன் வட்டாரத்தில் முழுநேர மருதாணிக் கலைஞராகவும் பணி புரிந்து வருகிறார். இந்தப் போட்டி குறித்து அறிந்து பொழுதுபோக்காக அதில் கலந்துகொள்ள வந்தார் பெலி. ஆனால் அவர் வரைந்த விநாயகர், பொங்கல் பானை, கரும்பு மருதாணி ஓவியம் அவருக்கு ஆறுதல் பரிசையும் பெற்றுத் தந்தது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த மருதாணிப் போட்டியை இரண்டாவது ஆண்டாக நடத்து கிறது லிஷா. "பொதுவாக தீபாவளிக்குத் தான் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வார்கள். ஆனால் இம்முறை பொங்கல் பண்டிகையை மருதாணியுடன் வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள்," என்று லிஷாவின் தலைவர் திரு ராஜகுமார் சந்திரா கூறினார்.
முதல் பரிசு வென்ற திவ்யா தனது உதவியாளராக வந்த அக்கா சங்கரிக்கு மருதாணி இடுவதைப் பார்வையிடுகின்றனர். படம்: ராஜராஜன்