சச்சரவைத் தவிர்க்க தென்சீனக் கடல் பகுதியில் இருக்கும் தீவுப் பகுதிகளை ராணுவமயமாக்குவதை சீனா நிறுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. ஊடி தீவில் சீனா ஏவுகணைகளை அமைத்திருப்பதாக அமெரிக்கா சாடிய ஒரு நாளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. முக்கியமான கடல்வழியான அந்தப் பகுதியில் தற்காப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக சீனாவும் நேற்று ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால் இது கவலைக்குரியபோக்கு என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிட்டிருந்தார். சீனாவும் அமெரிக்காவும் அனைத்துலக சட்டப்படி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இந்த வட்டாரத்தின் வளத்துக்கு அவசியம் என ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடும் நாடுகள் தீவுகளில் கட்டடங்கள் எழுப்புவது, ராணுவமயமாக்குவது, நிலமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு திரு டர்ன்புல், நியூசிலாந்துப் பிரதமர் ஜான் கீ ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண் டாடுகிறது. அங்கு கட்டடங்கள் எழுப்புவதன்மூலம் தேடுதல், மீட்புப் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும் என அது குறிப்பிட்டாலும் அப்பகுதியில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வது தனது உரிமை என அது வலியுறுத்தி வந்துள்ளது. அதே வேளையில், அந்தக் கடல் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளான புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், வியட்னாம் ஆகியனவும் அக்கடல் பகுதியின் பகுதிகளைச் சொந்தம் கொண் டாடுகின்றன. இருப்பினும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்வதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விமானங்கள், கப்பல்களை அனுப்புகின்றன. ஆனால் அச்செயல்கள் தன்னைச் சினமூட்டுவதாக சீனா குறிப் பிடுகிறது.