வாஷிங்டன்: அமெரிக்காவின் குடிநுழைவுக் கொள்கைகள் பற்றிய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துகளை 'கிறிஸ்துவர் அல்லாதவருடையவை' என்று போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார். அதனை அடுத்து தனது நம்பிக்கைமீது போப்பாண்டவர் கேள்வி எழுப்பியது 'வெட்கக்கேடானது' என திரு டிரம்ப் கடிந்துரைத்துள்ளார். தேசியக் கருத்து வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக இருந்துவரும் டிரம்ப், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் சுவர் எழுப்பி சட்ட விரோதக் குடியேற்றத்தை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார். மெக்சிகோ சென்று திரும்பும் வழியில் போப்பாண்டவர் செய்தியாளார்களிடையே பேசுகையில், "பாலங்கள் கட்டுவதற்குப் பதிலாக சுவர்கள் எழுப்புவது பற்றி மட்டும் நினைப்பவர் கிறிஸ்தவ ரல்லாதவர்," என்று சொன்னார்.
பெரும் சொத்துச் சந்தை வர்த்தகப் புள்ளியும் முன்னாள் தொலைக்காட்சிப் பிரபலமுமான டிரம்ப், "ஐஎஸ் அமைப்பின் இறுதி இலக்கான வத்திகன் நகர் அவ்வமைப்பால் தாக்கப்படும்போது டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்திருக்க வேண்டும் என போப்பாண்டவர் நினைப்பார்," என்று குறிப்பிட்டுள்ளார். "ஒருவருடைய நம்பிக்கைமீது சமயத் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது. நான் ஒரு கிறிஸ்துவராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். கிறிஸ்துவமதம் தாக்கப்படுவதையோ அல்லது அது பலவீனமடைவதையோ ஒரு அதிபராக நான் அனுமதிக்க மாட்டேன்," என்றும் திரு டிரம்ப் கூறியுள்ளார்.
போப்பாண்டவர் ஃபிரான்சிஸ், அதிபர் வேட்பாளராக விரும்பும் டொனால்ட் டிரம்ப், படம்: ராய்ட்டர்ஸ்