பங்ளாதேசத்தவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் சேர்ப்பையும் நிறுத்த மலேசியா முடிவு செய்துள்ளது. 1.5 மில்லியன் பங்ளாதேஷ் ஊழியர்கள் மலேசியாவுக்கு வரவிருப்பதாக வெளிவந்த செய்தியால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை அறிவித்த மலேசியத் துணைப் பிரதமர் அகமது சாகித் ஹமிடி, வெளிநாட்டு ஊழியர் தீர்வைத் திட்டம் மறுஆய்வு செய்யப்படும் வரை இந்த நிறுத்தம் நடப்பில் இருக்கும் என்றார். உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு முதலாளிகளைக் கேட்டுக்கொண்ட துணைப் பிரதமர், மலேசியாவில் தற்போது சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் ஊழியர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்பதையும் குறிப்பிட்டார்.
ஊழியரணி பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு வெளிநாட்டு ஊழியர் சேர்ப்பு தொடர்பான முடிவு எடுக்கப்படும் என மலே சியா குறிப்பிட்டது. வெளிநாட்டு ஊழியர் தொடர்பாக குறுகிய காலத்துக்குள்ளாகவே இரண்டாவது முறையாகக் கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது மலேசியா. பங்ளாதேஷிலிருந்து அடுத்த மூன்றாண் டுகளில் 1.5 மில்லியன் ஊழியர்கள் மலேசியாவில் வேலை செய்ய வகை செய்யும் புரிந் துணர்வு ஒப்பந்தத்தில், அந்நாட்டின் வெளி நாட்டவர் நலன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் நூருல் இஸ்லாமும் மலேசிய மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட்டும் கையெழுத்திட்டதாக பங்ளாதேஷின் டெய்லி ஸ்டார் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது. இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் 1.5 மில்லியன் பங்ளாதேஷ் ஊழியர்கள் மலேசியாவுக்கு வருவர் என்ற எண்ணம் தவறானது என்றார். மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா உட்பட 139 நாடுகளில் வேலை செய்ய பதிவு செய்துள்ள மொத்த பங்ளாதேசத்தவர்களின் எண்ணிக்கை அது எனக் கூறினார்.
நேற்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், மற்ற நாடுகளுடன் முன்னர் செய்யப் பட்டுள்ள ஒப்பந்தங்களைப் போன்ற ஒன்று தான். அதில் எந்த எண்ணிக்கையும் குறிப்பிடவில்லை. தேவையைப் பொறுத்து அரசாங்கம் பங்ளாதேஷ் ஊழியர்களை வரவழைக்கும். 11வது மலேசியத் திட்டத்தின்படி அனுமதிக்கப்படும் மொத்த வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை, மொத்த ஊழியரணியின் 15 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று திரு ரியோட் தெரிவித்தார்.