சமந்தா நடித்து அண்மையில் வெளிவந்த படம் 'பத்து எண்றதுக்குள்ளே'. அந்தப் படம் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் சமந்தாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கவில்லை. அவர் தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விஜய், தெலுக்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு ஆகியோருடன் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். மழை, வெள்ளம், கடும் பனி ஆகியவற்றை அனுபவித்தவர்கள் வெய்யிலே மேல் என்று நினைப்பார்கள். ஆனால் வெயிலைவிட மழையும், பனியுமே தனக்கு உகந்தது என்று நினைக்கிறார் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக வெயில் காலம் என்றாலே சமந்தாவுக்கு எரிச்சலும் கூடவே தொற்றிக்கொள்கிறது.
அவரது தோல் அலர்ஜிதான் எரிச்சலுக்குக் காரணமாம்.ஈ° சில ஆண்டுகளுக்கு முன் மணிரத்னம், ஷங்கர் இருவரது படங்களிலும் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவிடாமல் அவரை தடுத்து நிறுத்தியது தோல் அலர்ஜிதான். கோடை வந்தால் அலர்ஜியும் அவருக்குக் கூடவே முன்னிலையாகிவிடுகிறதாம். வெயிலில் நடிப்பதைத் தவிர்க்க தனது படப்பிடிப்புகளை மாலை அல்லது இரவு நேரத்துக்கு மாற்றும்படி இயக்குநரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம் இந்தக் கோடையில் விஜய்யுடன் நடித்துள்ள 'தெறி', சூர்யாவுடன் நடித்து மே மாதத்தில் வெளிவர இருக்கும் '24', மகேஷ்பாபுவுடன் இணைந்திருக்கும் தமிழ்த் தெலுங்குப் படமான 'பிரமோத்சவம்' ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது சமந்தாவுக்குக் குளிர்ச்சியைத் தரும் சேதியாகும்.