சின்னத்திரை, வண்ணத்திரை இரண்டிலும் நன்கு அறிமுகமானவர் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, இன்றைக்குப் பல்வேறு பாத்திரங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நீலிமா.
தமிழ்ச் சினிமா உங்களை நாயகியாக அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா? "இல்லை. நான் நடிக்க வரவேண்டும் என்றே முதலில் நினைக்கவில்லை. அதேபோல் நடிக்க வந்த பிறகு நாயகியாக நடிக்கவேண்டும் என்றும் நினைக்கவில்லை. இப்போது நாயகியாக நடிக்கும் தகுதியை எல்லாம் தாண்டிவிட்டதையும் நான் அறிவேன்.
எனக்கான அளவுகோல் எனக்குத் தெரியும். தற்போதைக்கு நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும். அது மக்களிடம் போய்ச் சேரவேண்டும். அதுவே எனக்குப் போதும்."
1992ல் இருந்து நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் நடிப்பு வாழ்க்கையில் மறக்கமுடியாத பாராட்டுகள் இருக்குமே...?
"நிறைய சம்பவங்கள் உள்ளன. 'நான் மகான் அல்ல' படத்தில் காஜல் அகர்வால் தோழியாக நடித்தேன். அப்படத்தில் ஜெயபிரகாஷ் சார் இறந்துவிடுவார். அந்தக் காட்சியில் என்னுடைய சோகம் அப்பிய முகத்தைப் பார்த்துவிட்டு, எடிட்டிங்கில் இருந்த இயக்குநர் சுசீந்திரன் சார் போன் பண்ணினார். 'நீலிமா நீ வாழ்நாள் முழுக்க நடித்துக்கொண்டே இருப்பாய். நீ சினிமாவை விடவேண்டுமென நினைத்தாலும், சினிமா உன்னை விடாது. இது என்னுடைய சாபம் என்றே வைத்துக் கொள். அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று உணர்ச்சி வசப்பட்டுப் பாராட்டினார்.
அவரது எதிர்மறையான வார்த்தைகளுடன் கூடிய இந்தப் பாராட்டை மறக்கவே இயலாது. "அதேபோல ராதிகா மேடத்திடம், என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து பெறச் சென்றிருந்தேன். இயக்குநர் சுசீந்திரன் சொன்ன அதே வார்த்தைகளை அவரும் சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. நடிக்க வந்து ஏதோ சரியாக செய்திருக்கிறோம் என்று திருப்தியாக இருந்தது," என்கிறார் நீலிமா.