தேர்தல் பிரசாரம் சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர் பொறுப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், மீண்டும் அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதிமுக தலைமைக்கு அவர் மீதிருந்த அதிருப்தி யும் கோபமும் முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்களும் அதிமுக வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர் கூறிய சில கருத்துகள் காரணமாக அதிமுக தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்த தாகக் கூறப்பட்டது. கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்ட போதிலும் அமைதி காத்து வந்தார் நாஞ்சில் சம்பத்.
"பதவி பறிபோனது பற்றி நான் கவலைப்பட வில்லை. அதேசமயம் கட்சிப் பணியாற்ற மேலிடம் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை," என மற்றொரு பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார். மேலிட நடவடிக்கைக்குப் பின்னர் அவர் கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் பொதுக்கூட்டங்களில் பேச அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது. அவர் அடுத்த வாரம் மூன்று கூட்டங்களில் பேச இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அரசு குறித்த எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக் குப் பதிலடி கொடுக்க அவர் தயாராகி வருகிறார்.