புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அது தொடர்பாக உலகம் முழுதும் இந்த மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளும் சோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் சிங்கப்பூரில் நேற்று தோ பாயோ வீவக மையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் புற்றுநோய் சங்கம், சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையம், தேசிய பல்கலைக்கழக புற்றுநோய்க் கழகம் ஆகியவை சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
வாழ்க்கைப் பாணி, ஆரோக்கியமான உணவு, புற்றுநோய் வருவதற்கான காரணிகள், பெண்கள் தொடர்பான புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை பற்றி நிகழ்ச்சியில் சிறப்பு மருத்துவர்கள் விளக்கினர். இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியும் நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோ பாயோ வீவக மையத்தில் நேற்று நடந்த முகாமில் பெருங்குடல் புற்று நோய் உள்ளதா என அறிந்துகொள்ள தேவையான மலச்சோதனைக் கருவிகளைப் பெறுவதற்கு தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர் வருகையாளர்கள்.
படம்: புற்று நோய் விழிப்புணர்வு முகாம் ஏற்பாட்டாளர்கள்