சுதாஸகி ராமன்
சிங்கப்பூரின் பண்புநெறிகளை எடுத்து இயம்புவதோடு ஒளிமயமான சிங்கப்பூரின் எதிர்காலத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டின் சிங்கே சாலை ஊர்வலத்தின் தொடக்க விழா சிங்கப்பூரர்களின் ஒன்றுபட்ட உணர்வையும் அதன் பலத்தையும் எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்தது. நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் உட்பட பல ஆயிரம் பார்வையாளர்களும் கலைஞர்களும் கொட்டிய மழையைத் துச்சமெனத் தட்டிவிட்டு, உற்சாகத்தோடு இந்த ஆண்டு ஊர்வலத்தைக் கொண்டாடினர். -மழை ஆடை அணிந்து ஆடி, பாடி நிகழ்ச்சிகளைப் படைத்தனர் 8,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள். கரவொலி எழுப்பியும் வண்ண விளக்குகளை அசைத்தும் பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டி அணிவகுப்பை ரசித்தனர் பார்வையாளர்கள்.
வெள்ளிக்கிழமை மாலை கொட்டிய மழையைத் தாண்டி, எழுந்த பல வண்ண விளக்கொளி நிகழ்ச்சி நடைபெற்ற 'எஃப்1' கார் பந்தய வளாகக் கட்டடத்தை ஒளிவெள்ளத்தில் நிறைத்து, இரவைப் பகலாக்கியது. பச்சை, வெள்ளை, தங்க நிறங்களாலான கடல்நாக வடிவ மிதவையில் மழை ஆடை அணிந்து துணைவியார் ஹோ சிங்குடன் வந்த பிரதமர் லீ சியன் லூங் கொண்டாட்ட மகிழ்ச்சியில் திளைத்தார். சிங்கப்பூரின் பல்லின சமூகத்தைக் கொண்டாடும் நோக் கிலும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டமாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'சிங்கே' சாலை அணிவகுப்பில் இவ்வாண்டு சீனா, ரஷ்யா, இந்தோனீசியா, தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடனங்களைப் படைத்தனர்.
'மாய விளக்கு' எனும் இந்திய நடனம் விளக்கொளியின் அழகை எடுத்துக் காட்டியது. மக்கள் கழக நற்பணிப் பேரவை, இந்தியர் நற்பணி செயற் குழுக்கள், 'மணிமாறன் கிரியேஷன்ஸ்', யுவபாரதி அனைத்துலகப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தோர் பங்கேற்ற இந்த அங்கத்தை பிரபல நடனக் கலைஞர் து.மணிமாறன் வடிவமைத்துள்ளார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்