பார்சிலோனா: லண்டன் எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ஆர்சனல்=பார்சிலோனா குழுக்கள் மோதின. இதற்காக நேற்று முன்தினம் காலையில் லண்டனுக்குப் புறப்பட்டது பார்சிலோனா குழு. விமான நிலையத்திற்கு வந்த பின்புதான் அக்குழுவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லூயிஸ் சுவாரெஸ் தமது கடவுச்சீட்டை வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து, குழு அதிகாரிகளில் ஒருவர் சுவாரெசின் வீட்டிற்குச் சென்று கடவுச்சீட்டை எடுத்து வர, உரிய நேரத்தில் அவரால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை இந்தப் பருவத்தில் பார்சிலோனாவிற்காக 37 போட்டிகளில் பங்கேற்ற சுவாரெஸ் 41 கோல்களையும் புகுத்தினார்.