காற்பந்து விளையாட்டில் தவறான ஆட்டத்தைக் கையாளும் வீரர்களை நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றுவதுதான் வழக்கம். ஆனால், நடுவரின் தீர்ப்பு சரியானதல்ல, அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் எனக் கூறி, வீரர் ஒருவர் நடுவருக்கே சிவப்பு அட்டை காட்டிய ருசிகர சம்பவம் துருக்கியில் நிகழ்ந்தது. துருக்கியின் முன்னணி தொடரான 'சூப்பர் லீக்'கில் ட்ராப்ஸன்ஸ்பர் - கலட்டாசரே குழுக்கள் நேற்று முன்தினம் மோதின. இந்தப் போட்டியின் 86வது நிமிடத்தில் கோல் பகுதியில் கலட்டாசரே ஆட்டக்காரர் கீழே விழ காரணமாக இருந்ததாகக் கூறி ட்ராப்ஸன்ஸ்பர் வீரர் லூயிஸ் கவாண்டாவிற்குச் சிவப்பு அட்டை காட்டி அவரைத் திடலைவிட்டு வெளியேற உத்தரவிட்டார் நடுவர் டெனிஸ் பிட்னெல்.
இதனால் ஆத்திரமடைந்த சக ட்ராப்ஸன்ஸ்பர் வீரர்கள் பிட்னெலைச் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், பிட்னெலின் கையில் இருந்த சிவப்பு அட்டையைப் பிடுங்கிய சாலி டுர்சுன் (வலது), பிட்னெலை நோக்கி சிவப்பு அட்டையை உயர்த்திக் காட்டி அவரை வெளியேறச் சொன்னார். உடனடியாக, அட்டையைப் பிடுங்கிய பிட்னெல், டுர்சுனுக்கும் சிவப்பு அட்டை காட்டினார். இந்த ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய 4வது ட்ராப்ஸன்ஸ்பர் வீரர் இவர். ஆட்டத்தை 2-1 என வென்றது கலட்டாசரே. படம்: ராய்ட்டர்ஸ்