கரூர்: தமிழக மக்களை முதல்வர் ஜெயலலிதா முழுமையாக வஞ்சித்து விட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். கரூரில் திமுக சார்பில் நடைபெற்ற உறுதி முழக்கப் பேரணி, பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வழி தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தே தீரும் என்றார். "நான் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட நமக்கு நாமே பயணம் அமோக வெற்றி பெற்றுள்ளது. இப்பயணத்தின்போது 11 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் சென்று 4 லட்சம் மனுக்களைப் பெற்றுள்ளேன். "இன்னும் சில மாதங்களே முதல்வராக இருக்கப்போகிற முதல் வர் ஜெயலலிதாவையே நமக்கு நாமே பயணம் பீதியடைய வைத்துள்ளது. மாற்றம் நிச்சயம் ஏற்படப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கி றோம்," என்றார் ஸ்டாலின்.
விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தாம் சந்தித்துப் பேசியதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியின் கொடுமை களையும் பாதகங்களையும் சொல்வ தென்றால் அதற்குப் பல வருடங்கள் ஆகும் என்றார். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பில் உயரத்தில் இருந்த தமிழகம் இப்போது கொலை கொள்ளைகளுக்குப் பெயர் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிமுகவின் அவல ஆட்சியே இதற்குக் காரணம் எனச் சாடினார். தற்போது பல்வேறு கொடுமைகளில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் 53 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும் அவற்றுள் 50 வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார். "சட்டப்பேரவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசவே 110 விதி உள்ளது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் 110 விதியின் கீழ் 600க்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 550 அறிவிப்புகள் கானல் நீராகவே உள்ளன," என்று கூறிய ஸ்டாலின் இந்த ஆண்டு தமது பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் எனக் கட்சி யினரைக் கேட்டுக்கொள்வதாக ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.