புதுடெல்லி: நேரு பல்கலை, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். எது குறித்து வேண்டுமானாலும் அவையில் பேச அரசு தயாராக இருக்கிறது என்றார் வெங்கையா நாயுடு. நேரு பல்கலைக்கழகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்வதாகச் சாடினார். இதற்கிடையே தேசத்துரோக செயல்களில் ஈடு பட்டு வரும் தனது மகளைச் சுட்டுக் கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு டி.ராஜா உத்தரவிட வேண்டும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"கம்யூனிஸ்டுகள் தங்களை தேச பக்தர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். டி.ராஜாவின் மகளோ தேச விரோத போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். எனவே தனது தேச பக்தியை நிரூபிக்க ராஜா தனது மகளைச் சுட்டுக் கொல்ல உத்தரவிடட்டும்," என எச்.ராஜா கூறியுள்ளார். நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.