39ஆம் திருமுறை மாநாடு இன்று தொடங்குகிறது. சிங்கப்பூரில் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திருமுறை மாநாடு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜூலை 19, 20, 21) டேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோயில் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது.
பேரூர் மாணிக்கவாசகர் அருட்பணி மன்றச் செயலாளர் திரு ப குமாரலிங்கம் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு முதல் நாள், அம்பலவாணர் சிறப்புச் சொற்பொழிவாக “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தலைப்பிலும், மற்ற இரு நாட்களில் முறையே, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “அஞ்செழுத்தை நெஞ்சிலழுத்து” என்ற தலைப்புகளிலும் பேச உள்ளார்.
டெப்போ ரோட்டில் உள்ள அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
மாநாடு தொடர்பாக முன்னரே நடைபெற்ற திருமுறைகள் ஓதும்போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் நாளையும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் வழங்கப்படும்.
ஜூலை 21ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு பொத்தோங் பாசிர் அருள்மிகு சிவதுர்க்கா ஆலயத்தில் நடைபெறும் 63 நாயன்மார் குருபூசையைத் தொடர்ந்து இடம்பெறும் கேள்வி பதில் நேரத்தில் திரு ப குமரலிங்கம், இணைப் பேராசிரியர் சுப திண்ணப்பன் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
பொத்தோங் பாசிர் அருள்மிகு சிவதுர்க்கா ஆலயத்தின் ஆதரவில் வருகையளிப்போருக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் பணியாற்றும் எல்லா ஓதுவார்களும் ஒவ்வொரு மாலை நேரமும் பக்கவாத்தியக் கலைஞர்களின் துணையுடன் திருமுறைகளைப் பண்ணோடு ஓதிப் பரவசப்படுத்துவர்.
எல்லோரும் வரவேற்கப்படுகின்றனர்.2019-07-19 06:00:00 +0800