இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ‘வியாசராய தீர்த்தர் பிருந்தாவனம்’ என்ற புராதன வழிபாட்டுத் தலம், இம்மாதம் சில மர்ம நபர்களால் இடிக்கப்பட்டிருந்தது. சில நாட்களிலேயே அதற்கான புனரமைப்புப்பணிகள் எந்த ஓர் ஆர்ப்பாட்டமுமின்றி முடிந்தன. சீனாவில் இதுபோலவே அந்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட 6,000க்கும் அதிகமான சமயத்தலங்களும் ஆலயங்களும் மர்மமான முறையில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. முன்னைய கம்யூனிஸ்டு புரட்சிக்காலத்தின்போது பாரம்பரிய வழிபாட்டுத்தளங்கள் அபாயத்திற்கு உள்ளானது போல் அதிபர் சீ ஜின்பிங்கின் ஆட்சியில் மீண்டும் இந்தப் பிரச்சினை தலைதுாக்கியிருப்பதாக ‘பிட்டர் விண்டர்’ செய்தி இணையத்தளம் குறிப்பிடுகிறது.
வடக்குச் சீனாவிலுள்ள ஹெபெய் மாநிலத்திலுள்ள ‘னைனை’ கோவில், கிராமத்து மக்களிடையே பிரபலமாக இருந்தது. பலரின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவதாகக் கூறப்படும் இந்த இடம், டாவிச மதத்தின் பிரதான சமயச் சடங்கு இடமாகவே கருதப்பட்டு வந்தது.
சீனாவின் சர்வாதிகார அரசின் அதிகாரி ஒருவர் யாத்திரீகராக வேடமிட்டு அந்த மலைக்குள் சென்று சோதனை நடத்தியதாக மலையைச் சுற்றியுள்ள வட்டாரவாசிகள் தெரிவித்தனர். பின்னர், பிரதான சன்னிதியைத் தவிர மற்ற அனைத்து சன்னிதிகளையும் கட்டடங்களையும் இடித்துத்தள்ள மாநில அரசு உத்தரவிட்டது. மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையே அந்த வட்டாரத்தில் 32 கோவில்களும் குறைந்தது 164 சமயம் சார்ந்த கட்டடங்களும் இடிக்கப்பட்டன. இந்தக் கட்டடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்று அரசு மக்களுக்குக் கூறிவருகிறது.
இதே போல மார்ச் மாதத்தில் ஜியாங்சு மாநிலத்திலுள்ள காவ்யூ நகரில் கிராம தேவதைகளுக்கான 5,911 கோவில்கள் 26 நாட்களுக்குள் இடிக்கப்பட்டன. காலங்காலமாக இருந்துவந்த இந்தக் கோவில்கள் அனைத்தும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்ற காரணத்தை சீன அரசாங்கம் திரும்பவும் சொல்கிறது. ஸென்ஜியாங் மாநிலத்திலும் 21 கோவில்கள் இதுபோல இடிக்கப்பட்டுள்ளன. அனைத்து சமயங்களையும் எதிர்க்கும் சீன அரசாங்கத்தின் இந்த முயற்சியால் மக்களின் அடையாளமும் கலாசாரமும் தேய்வது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கவலைப்படுகின்றனர்.