இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை திகழ்கிறது. அந்தப் புனித பயணத்திற்கான உடல் வலிமையும் நிதியும் உள்ள முஸ்லிம்கள் அதனைச் செய்ய கடமைப்பட்டவர்களாவர். அது குறித்த சில தகவல்கள்.
- ஹஜ் யாத்திரை இஸ்லாமிய பின்பற்றலின் ஐந்தாவது ‘தூணா’கக் கருதப்படுகிறது. நம்பிக்கையை வெளிப்படுத்துதல், தினசரி செய்யவேண்டிய ஐந்து முறைத் தொழுகைகள், ஈகை, ரமலான் நோன்பு ஆகியவை இஸ்லாமின் மற்ற நான்கு தூண்கள்.
- இந்தோனீசியா, இந்தியா, ரஷ்யா, நைஜீரியா என உலகின் பல்வேறு திசைகளிலிருந்து முஸ்லிம்கள் நாடும் இடம் சவுதி அரேபியா. அங்கு செல்லும் அனைவரும் வெள்ளை நிற உடையை அணிந்திருக்கவேண்டும்.
- மக்கா நகரின் ஆகப் புனிதமான பள்ளி வாசலின் மத்தியில் இருக்கும் காபாவை யாத்திரீகர்கள் ஏழு முறை வலம் வருவர். அன்றாட பிரார்த்தனைகளுக்காக முஸ்லிம்கள் இந்தக் காபாவைத்தான் நோக்கி தொழுகை செய்கின்றனர்.
- ஸாம் ஸாம் என்ற கிணற்றிலிருந்து யாத்திரீகள் புனித நீரை அருந்துவர். அந்நீரில் சிலவற்றை அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
கிட்டத்தட்ட 370 முஸ்லிம் சிங்கப்பூரர்கள் நேற்று முன்தினம் சாங்கி விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்குச் சென்றனர். சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் முகம்மது ஃப்த்ரிஸ் பக்காராம் அந்த யாத்திரீகர்களை வழியனுப்பி வைத்தார். அவருடன் முயிஸ் துணைத்தலைவர் முகமது ஃபாமி அலிமான், மூத்த நாடாளுமன்ற செயலாளர் அம்ரின் அமின் ஆகியோர் சென்றிருந்தனர்.