கழிவு மேலாண்மை, மறுசுழற்சித் துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம்.
இந்த விவகாரம் தொடர்பில் ஒரு முத்தரப்புக் குழுவை அமைப்பது தொடர்பில் மனிதவள அமைச்சிற்கு அண்மையில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் ஸைனல் சப்பாரி நேற்று இதனைத் தெரிவித்தார்.
கழிவு மேலாண்மை, மறுசுழற்சிச் சங்கத்தில் இருந்து அப்பரிந்துரையைப் பெற்ற என்டியுசி, பின் அதனை மனிதவள அமைச்சிற்கு அனுப்பி இருப்பதாகவும் அமைச்சின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் திரு சப்பாரி கூறினார்.
கிராஞ்சி கிரசென்டில் உள்ள ‘வா அண்ட் ஹுவா பிரைவேட் லிமிட்டெட்’ எனும் கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு என்டியுசி தலைமைச் செயலாளர் திரு இங் சீ மெங்கும் திரு சப்பாரியும் வருகை மேற்கொண்டனர்.
கழிவு மேலாண்மை, மறுசுழற்சித் துறையில் படிப்படியான சம்பள உயர்வு முறை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றும் அதனை நடைமுறைப்படுத்தச் சிறிது காலம் ஆகலாம் என்றும் அவ்விருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
எடுத்துக்காட்டாக, தேர்ச்சி நிலைகள் தொடர்பில் அத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் முத்தரப்புக் குழு பணியாற்ற வேண்டி இருக்கும் என்றும் படிப்படியான சம்பள உயர்வு முறையை நடைமுறைப்படுத்த சட்டபூர்வ அமைப்புகளுடன் இணைந்து பொருத்தமான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் திரு ஸைனல் விளக்கினார்.
கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது, எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியமாக $1,300 வழங்கப்பட வகைசெய்ய வேண்டும் என்று பாட்டாளிக் கட்சி வலியுறுத்தியது. அப்போது, படிப்படியான சம்பள உயர்வு முறையால் 80,000 துப்புரவாளர்கள், பாதுகாவலர்கள், நிலவனப்பு ஊழியர்கள் அண்மைய ஆண்டுகளில் 30% ஊதிய உயர்வு பெற்றுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட படிப்படியான சம்பள உயர்வு முறை, இதுவரை மூன்று துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்முறை மிகவும் மெதுவாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா எனப் பாட்டாளிக் கட்சி கேள்வி எழுப்பியது.
அதுபற்றி திரு இங்கிடம் கேட்டதற்கு, “நீண்டகால நோக்கில், படிப்படியான சம்பள உயர்வு முறை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சாத்தியங்களையும் ஆராய்ந்து, பல்வேறு துறைகளிலும் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த முடியும் என என்டியுசி நம்புகிறது,” என்று பதில் அளித்தார்.
வேலைநலன் துணை வருமானத் திட்டத்துடன் படிப்படியான சம்பள உயர்வு முறையால் ஏராளமான ஊழியர்கள் பலனடைந்து உள்ளதாக திரு இங் குறிப்பிட்டார்.
அத்துடன், ஊதியத்தை உயர்த்தும் சுமை முழுவதுமாக நிறுவனங்கள் மீது சுமத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டினார்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கு வேலைநலன் துணை வருமானத் திட்டம் மூலம் கூடுதல் ரொக்கம் கிடைக்கிறது. அதனால், நிறுவனங்கள் தங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும் என்றும் ஒட்டுமொத்த துறையும் வளர்ந்து, ஊழியர்களுக்குக் கூடுதல் ஊதியம் கிடைக்கலாம் என்றும் திரு இங் கூறினார்.
ஊழியர்களுக்கு உதவுவதன் வழியாக நிறுவனங்களுக்கும் கைகொடுக்கிறோம் என்ற அவர், இதனால் அனைத்துத் தரப்பினரும் பலனடைய முடிகிறது என்றும் சொன்னார்.
தொழில்துறை தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு ஊழியர்களுக்கான கூடுதல் ஊதியம் இருந்தால், நிறுவனங்கள் மூடப்பட்டு, ஊழியர்கள் வேலையின்றித் தவிக்க நேரிடலாம் என்றும் திரு இங் குறிப்பிட்டார்.
படிப்படியான சம்பள உயர்வு முறை, வேலைநலன் துணை வருமானம் என இரண்டும் சேர்ந்த ஒட்டுமொத்தப் பிரச்சினையாக இதை நாம் பார்க்க வேண்டும் என்று திரு இங் கேட்டுக்கொண்டார்.