தீவு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
மூன்று கார்கள், ஒரு சிற்றுந்து, ஒரு லாரி, ஒரு மோட்டார்சைக்கிள் ஆகிய ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து குறித்து பிற்பகல் 2.05 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
துவாசை நோக்கிய விரைவுச்சாலையில் ஜாலான் பகார் வெளிவழிக்கு முன்னதாக விபத்து நேர்ந்தது.
லாரிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ‘ஹைட்ராலிக்’ கருவிகளைப் பயன்படுத்தி மீட்டது.
காயமடைந்த கார் ஓட்டுநர், சிற்றுந்து ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய மூவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்தப் படை தெரிவித்தது.
அவர்கள் 26 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர்கள் என்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அனைவரும் சுயநினைவுடன் இருந்தார்கள் என்றும் அது குறிப்பிட்டது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் ஏராளமான காவல்துறை வாகனங்களும் அதிகாரிகளும் விரைவுச் சாலை வாகன மீட்பு வாகனமும் இருந்ததை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்று காட்டியது.

