போதைப்புழங்கிகள் கஞ்சா உள்ளிட்ட எட்டு வகையான போதைப்பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 30 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். மேலும் கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மோர்ஃபின், கஞ்சா, போதைமிகு அபின் உள்ளிட்ட போதைப்பொருள்களை குறிப்பிட்ட எடைக்கு மேல் வைத்திருப்போருக்கு, அடுக்கு அடிப்படையிலான கட்டமைப்பைப் பொறுத்து தண்டனை விதிக்கப்படும்.
முதல் அடுக்கின்கீழ் 330 கிராமுக்குக் குறைவாக கஞ்சா வைத்திருப்போருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது $20,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். நடு அடுக்கின்கீழ், 330 கிராமுக்கும் 500 கிராமுக்கும் இடையிலான எடை கொண்ட கஞ்சாவை வைத்திருப்போர் 10லிருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையையும், ஐந்திலிருந்து பத்து பிரம்படிகள் வரையிலும் எதிர்நோக்குவர்.
500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருக்கும் ஆக உயரமான அடுக்கில் வரும் குற்றவாளிகளுக்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10லிருந்து 15 பிரம்படிகள் வரையிலும் விதிக்கப்படலாம். இதற்கு முன்னர், எடையைக் கருத்தில் கொள்ளாமல் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் எதனையும் வைத்திருந்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது $20,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டது.