மக்கள் செயல் கட்சி, வரும் பொதுத் தேர்தலில் 93 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்று பாட்டாளிக் கட்சி தந்திரமாகக் கூறி வருகிறது என்றும் அப்படிப்பட்ட தேர்தல் முடிவு நடைமுறை சாத்தியமற்றது என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
உண்மையிலேயே வரும் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்று திரு லீ தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
திரு லீ, தன்னுடைய தலைமையின்கீழ் அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடும் மசெக வேட்பாளர்களை நேற்று அறிமுகப்படுத்தினார். அப்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
“நாம் நெருக்கடியை எதிர்நோக்கினாலும் மக்கள் வலுவான அரசாங்கத்தை விரும்புகிறார்கள். அதே நேரத்தில் பலரும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
“இவற்றை வைத்து பார்க்கையில், உண்மையிலேயே பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகள் மக்களுக்கு கவலை தருகின்றன. அதை நாங்கள் உணர்கிறோம்,” என்று செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்தபோது திரு லீ குறிப்பிட்டார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தன்னுடைய கட்சியின் கொள்கை அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
அப்போது பேசிய திரு சிங், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் முற்றிலும் தோல்வி அடையக்கூடிய ஆபத்து உண்மையிலேயே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
பாட்டாளிக் கட்சி இப்படி கூறுவது தந்திரமான ஒரு செயல் என்று குறிப்பிட்ட பிரதமர், அந்தக் கட்சி இப்போது நேர்மாறான அணுகுமுறையைக் கையில் எடுத்து இருப்பதாகத் தெரிவித்தார்.