மக்கள் செயல் கட்சியின் புதுமுக வேட்பாளரான திருவாட்டி கான் சியோ ஹுவாங், 46, மேரிமவுண்ட் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தற்போது என்டியுசியின் Employment and Employability Institute-ன் துணைத் தலைமை நிர்வாகியாக இருக்கிறார்.
முன்னாள் ஆகாயப்படை பிரிகேடியர்-ஜெனரலான அவர், சிங்கப்பூரின் முதல் பெண் ஜெனரல் எனும் பெருமைக்குரியவர்.
கடந்த சில நாட்களாக பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் மக்களிடையே உலா வந்த அவர் அங்கு போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்று அவர் மேரிமவுண்ட் தனித்தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அந்தத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் டாக்டர் அங் யோங் குவான், 65, போட்டியிடுகிறார். அவர் ஒரு மனநல நிபுணர்; முந்தைய தேர்தலில் ‘சிங்கப்பூரியன்ஸ் ஃபர்ஸ்ட்’ கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்டிருந்தார்.
பீஷான் - தோ பாயோவிலிருந்து பிரிந்த தனித்தொகுதி மேரிமவுண்ட் தனித்தொகுதி. அங்கு 23,444 வாக்காளர்கள் உள்ளனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online