சிங்கப்பூரின் மக்கள்தொகையை 10 மில்லியனாக உயர்த்த திட்டம் ஏதுமில்லை என்று மக்கள் செயல் கட்சியைச் சொல்ல வைக்க அதற்கு நெருக்குதல் தந்து வெற்றி பெற்றுள்ளதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
மக்கள்தொகையை 10 மில்லியனாக உயர்த்தப் போவதாக தாம் ஒருபோதும் சொன்னதில்லை என்று மக்கள் செயல் கட்சி கூறிவருகிறது.
இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் நடைபெற்ற தேர்தல் விவாதத்தின்போது வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் திரு ஹெங் சுவீ கியட் கலந்துகொண்ட கலந்துரையாடல் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட அறிக்கையை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி சுட்டியது.
நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து நிலைத்திருக்க 10 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டிருக்க சிங்கப்பூர் திட்டமிட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் திட்ட வரைவாளர் திரு லியூ தாய் கெர் கூறியதைத் திரு ஹெங் சுட்டியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.