தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைந்த மூன்று நிமிட காணொளியை கல்வி அமைச்சர் ஓங் யி காங் தம் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அகற்றியுள்ளார். செம்பவாங் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவனிடம் திரு ஓங் பேசுவதாக அமைந்த அந்தக் காணொளி, தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து திரு ஓங் அதை அகற்றினார்.
வேட்புமனு தாக்கல் தினத்திற்கும் வாக்களிப்புத் தினத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று நாடாளு மன்றத் தேர்தல் சட்டம் கூறுகிறது. இதன்படி தேர்தல் காலகட்டத்தில் சிறார்கள் ஓர் அரசியல் கட்சியை விளம்பரப்படுத்தும் வகையில் காணொளியில் தோன்றவோ கட்சி சார்ந்த வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கவோ கூடாது.
“இந்த இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு இருந்தாலும் எதனை விளம்பரப்படுத்துகிறோம் என்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள சிறார்களை அரசியல் கட்சி கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும்,” என்கிறது தேர்தல் துறை இணையப்பக்கம். செம்பவாங் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி அணியில் போட்டி யிடுகிறார் திரு ஓங்.
அகற்றப்பட்ட காணொளியில் பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஜானி என்ற சிறுவனிடம் செம்பவாங் வட்டாரத்தில் பிடித்தமான இடங்கள் யாவை என்று திரு ஓங் கேட்க, சிறுவன் அதற்குப் பதில் அளிக்கிறார். இதையடுத்து செம்பவாங் வட்டாரத்தை ‘ஓர் அழகான பூங்கா’வாக செம்பவாங் குழுத்தொகுதி உறுப்பினர் லிம் வீ கியெக், மாற்றுவதற்கு முன் அங்கு ஒன்றுமே இல்லை என்று திரு ஓங் கூறுகிறார். அத்துடன் ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகள் பற்றிய கருத்தாக்கத்தையும் திரு ஓங் காணொளியில் ஜானியிடம் விளக்குகிறார்.
“எங்களுக்கு ஆதரவு தந்தால், இந்த வசதிகளை எல்லாம் நாங்கள் செய்து தருவோம். வாழ்க்கையை மேலும் சிறப்பானதாக்குவோம். அதனால்தான் இதையெல்லாம் நான் விளக்குகிறேன்,” என்று திரு ஓங் சிறுவனிடம் கூறுகிறார்.
“நீங்கள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்?’’ என்று சிறுவன் கேட்க, “நல்ல கருத்து,” என்று திரு ஓங் பதிலளிக்கிறார். ‘சாயாங் செம்பவாங்’, ‘செம்பவாங் மீது அன்பு செலுத்துங்கள்’ ஆகிய முழக்கவரி களை அடுத்து மசெக சின்னம் காட்டப்படுவதுடன் காணொளி முடிவடைகிறது.