மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் கைகூடுவதற்கு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையை வலுவான பங்காளித்துவம் இருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் நல்வாழ்வு, வசதிகள், ஊழியர்களின் ஆற்றல் மேம்பாடு, பொருளியல் வளப்பம் போன்றவை மேம்பட மக்கள் செயல் கட்சியில் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்றும் திரு ஈஸ்வரன் நேற்று முன்தினம் மீடியாகார்ப் தொலைக் காட்சியில் இடம்பெற்ற கட்சி அரசியல் ஒளிபரப்பின்போது தமிழில் கூறினார்.
“கடந்த ஏழு மாதங்களாக கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளில் பொருளியல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்களையும் வேலைகளையும் காப்பதே அரசாங் கத்தின் அவசரக் கடைமை.
“இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர, வாக்காளர்களின் உறுதியான ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை. ஆகவே மக்கள் செயல் கட்சிக்கு வாக்களியுங்கள்,” என்று அமைச்சர் ஈஸ்வரன் தமது 13 நிமிட உரையில் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதலில் பேசியவர் மக்கள் குரல் கட்சியின் ரா. விக்னேஸ்வரி. அவர் தமது 3 நிமிட உரையில், சிங்கப்பூர் மக்களிடையே வருமான இடைவெளி பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சிங்கப்பூரர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் கூறினார்.
அடுத்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக்சார்பில் தமக்குக் கொடுக்கப்பட்ட 5 நிமிட உரையில் அக்கட்சியின் வேட்பாளர் திருவாட்டி கலா மாணிக்கம், “எங்கள் கட்சியில் நகர மன்றத்தை நிர்வகிக்கும் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் தன்னிடம் உள்ள நிதி இருப்பைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
“மக்கள் செயல் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் கிடைக்கூடிய பெரும்பான்மையை நிராகரிக்க வேண்டும்,” ஆகிய மூன்று அம்சங்கள் பற்றி டாக்டர் டான் குறிப்பிட்டிருந்ததை வாசித்தார்.