பாட்டாளிக் கட்சி, நாடாளுமன்றத்தில் ஆக்ககரமான தனது பங்கை ஆற்றும் என்றும் மக்கள் செயல் கட்சிக்கு (மசெக) தேவையின்றி தொந்தரவு விளைவிப்பது எங்கள் கட்சியின் நோக்கமல்ல என்றும் அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள பல சிங்கப்பூரர்களுக்கு வேலை கிடைப்பது முக்கிய விவகாரமாக இருப்பதை அவர் சுட்டினார்.
“வேலைகளை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு கடினமான பணி உள்ளது. மசெகதான் மறுபடியும் ஆட்சி அமைக்கப்போகிறது. எனவே, வேலை விவகாரத்தில் மசெகவின் நிலைப்பாட்டிற்குச் சவால் விடுப்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சி என்ற முறையில் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவோம்,” என்று திரு சிங் கூறினார்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் தமது பாட்டாளிக் கட்சி அணியுடன் சேர்ந்து மரின் டெரஸ் சந்தைக்கு நேற்று தொகுதி உலா சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம்மும் திரு சிங்குடன் இருந்தார்.
இந்நிலையில், மூன்று பெரிய எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து மாற்று அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று மசெகவின் கூற்றை திரு சிங் நிராகரித்தார்.
கடந்த வியாழக்கிழமை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியதுபோல ஒன்றும் நடக்காது என்று திரு சிங் சொன்னார்.
“சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 16 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஓர் இடத்தை வென்றது.
“1988ஆம் ஆண்டில் குழுத் தொகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் குழுத் தொகுதி ஒன்றை எதிர்க்கட்சி வென்றது,” என்றார் திரு சிங்.
1981ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் ஆன்சன் தொகுதியை பாட்டாளிக் கட்சியின் ஜே.பி.ஜெயரத்தினம் வென்றதையும் 2011ல் அல்ஜுனிட் குழுத் தொகுதியைத் தமது கட்சி வென்றதையும் திரு சிங் சுட்டினார்.
“இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மூன்று எதிர்க்கட்சிகள் சேர்ந்து மாற்று அரசாங்கத்தை உருவாக்கும் என்று திரு சான் கூறுவது முற்றிலும் சாத்தியமற்றது,” என்றார் திரு சிங்.
இம்முறை மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி அணிக்கு திரு ரோன் டான் தலைமை தாங்குகிறார். 2015 பொதுத் தேர்தலில் அவர் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிட்டார். அவரது அணியில் முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் யீ ஜென் ஜோங், முகம்மது ஃபாட்லி ஃபவ்ஸி, நெத்தனியல் கோ, முகம்மது அஸார் அப்துல் லத்தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி அணியின் புதுமுகங்கள் குறித்து கருத்துரைத்த திரு பிரித்தம் சிங், “மக்களுக்கு சேவையாற்றும் மனப்பான்மை கொண்டவர்கள் எங்களுக்குத் தேவை. மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் அவர்களை அமர்த்த விரும்புகிறோம்,” என்றார்.
மரின் டெரஸ் சந்தையில் நேற்று தொகுதி உலா சென்ற பாட்டளிக் கட்சி வேட்பாளர்கள், குடியிருப்பாளர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மசெக வேட்பாளர் டான் சீ லெங்கும் அப்போது அங்கிருந்தனர். அவர்களை சந்தித்த பாட்டாளிக் கட்சியினர் அவர்களுடன் அளவளாவினர்.