கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக பொதுத் தேர்தல் பிரசாரம் இணையம் மூலம் நடைபெற்று வரும் வேளையில், தொழில்நுட்ப ஆற்றல் குறைந்த மூத்த குடியிருப்பாளர்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கான தேவை இருப்பதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டைலன் இங் கூறியுள்ளார்.
நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள உணவங்காடி நிலையம் ஒன்றுக்கு நேற்று தொகுதி உலா சென்ற அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளரிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமையகத்திற்கு அருகே அந்த உணவங்காடி நிலையம் அமைந்துள்ளது. மசெக மற்றும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றுக் காலை அந்த உணவங்காடி நிலையத்திற்குச் சென்று குடியிருப்பாளர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
மூத்த குடியிருப்பாளர்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் குறுக்குவழி எதுவும் கிடையாது என்று திரு இங் சொன்னார்.
“சில மூத்த குடியிருப்பாளர்களிடம் நாங்கள் ஆங்கிலத்தில் பேசினால் அவர்களுக்குப் புரியாது. எனவே, அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் நாம் பேச வேண்டும்,” என்றார் அவர்.
திரு இங்குடன் சேர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளர்களான திரு கென்னத் ஃபூ, திருமதி நிக்கோல் சியா ஆகியோரும் தொகுதி உலாவில் கலந்துகொண்டனர்.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமையிலான மசெக அணிக்கு எதிராக பாட்டாளிக் கட்சி போட்டியிடுகிறது.
திரு ஹெங்கின் அணியுடன் போட்டியிடுவது ஒரு சவால்மிக்க பணி என்று பாட்டாளிக் கட்சி அணி நேற்று முன்தினம் கூறியிருந்தது.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் மசெக அணிக்கு வலுச்சேர்ப்பதற்காக தெம்பனிஸ் அணியிலிருந்து திரு ஹெங் அங்கு மாறினார்.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் மசெகவும் பாட்டாளிக் கட்சியும் போட்டியிடுவது இது நான்காவது முறை.
இந்நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் முடிந்தவரை வாக்குகள் பெறுவதைத் தமது அணி உறுதி செய்ய வேண்டும் என்று பாட்டாளிக் கட்சி வேட்பாளர் நிக்கோல் சியா கூறினார்.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் தமது அணி கடுமையான போட்டியைத் தரும் என்று குறிப்பிட்ட அவர், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது குறித்து அத்தொகுதி வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் என்றார்.
திருமதி சியாவின் கருத்து குறித்து மேலும் விவரித்த சக வேட்பாளர் கென்னத் ஃபூ, “எங்களைத் தேர்வு செய்வதா அல்லது எதிர்காலப் பிரதமர் இருக்கும் அணியைத் தேர்வு செய்வதா என்பது பற்றிய குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் துணைப் பிரதமர் ஹெங்கின் அணி தோல்வியுற்றால் அரசியலில் மிக மோசமான விளைவு ஏற்படுமா என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “திரு ஹெங் மீது எங்களுக்கு அதீத மரியாதை உண்டு. ஆனால், நீங்கள் ஒரு அமைப்பை உருவாக்குகிறீர்கள் என்றால், அதில் உள்ள ஒரே ஒரு நபரை மட்டும் நம்பியா அந்த அமைப்பு இருக்கும்? அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பதில் மசெகவில் பலருக்கும் ஆற்றல் உள்ளது,” என்று பாட்டாளிக் கட்சியின் சக வேட்பாளர் டெரன்ஸ் டான் பதில் அளித்தார்.