புதுப்பிப்பு என்பது பாட்டாளிக் கட்சிக்கு முக்கியமானதொரு நடைமுறை என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்து உள்ளார்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்களிடம் நேற்று வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த ஐந்து உறுப்பினர் குழுத் தொகுதியில் பாட்டாளிக் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இவர்களில் முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான யீ ஜென் ஜோங் மட்டுமே இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் புதியவர்கள். இதனை திரு சிங்கிடம் சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள், கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பிப்பு நடவடிக்கை பற்றி வினவினர்.
அதற்குப் பதிலளித்த திரு சிங், “மக்களிடம் தொடர்பில் இருப்பது என்பது அரசியல் கட்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று. சிங்கப்பூர் மிகவும் மாறுபட்டதொரு சமூகமாக மாறியுள்ளது. வெவ்வேறு தேவைகளுடைய பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கிய சமூகம் என்பதால் பன்முக அணிக்கான அவசியம் உள்ளது.
“நல்லெண்ணம் கொண்டவர்கள் மக்களுக்குப் பணியாற்ற முன்வரவேண்டும் என்பதையே நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கு மதிப்பளிப்பதோடு நாடாளுமன்றத்திலும் நற்பண்புகளை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் எங்களது விருப்பம்.
“குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியிருப்பாளர்களுக்காக அவர்கள் பாடுபட வேண்டும். எனவே அதுபோன்றவர்களை மக்கள் மத்தியில் நிறுத்த எங்களால் இயன்ற வரை முயன்று வருகிறாம்.
“எங்கள் பணியை இடைவிடாது தொடர வேண்டியது எங்களுக்கு மிகவும் முக்கியம். கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. இவற்றுக்கு ஏற்றவாறு செயல்படக் கூடிய அணியை ஏற்படுத்த நாங்கள் முயலுகிறோம்,” என்று விவரித்தார் திரு சிங்.
மரின் பரேட் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர் அணியை டான் சுவான் ஜின் வழிநடத்துகிறார். எட்வின் டோங், சீ கியன் பெங், டான் சீ லெங், ஃபாஸ்மி அலிமான் ஆகியோர் அந்த அணியில் உள்ளனர்.
இந்த அணியை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கும் பாட்டாளிக் கட்சி அணியில் யீ ஜென் ஜோங், ரோன் டான், முகம்மது அஸார் அப்துல் லத்திப், முகம்மது ஃபாட்லி ஃபவ்ஸி, நெத்தனியல் கோ ஆகியோர் உள்ளனர்.
இவர்களை ஆதரித்து பிரித்தம் சிங், சில்வியா லிம் உள்ளிட்டவர்கள் நேற்றுக் காலை முதல் இந்தத்தொகுதியில் வலம் வந்து குடியிருப்பாளர்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கட்சியின் தேர்தல் பிரசுரங்களை அப்போது அவர்கள் விநியோகித்தனர்.