சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் போதுமான விவரங்கள் இல்லை என்றும் அது மிகவும் சுருக்கமானது என்றும் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் நேற்று தொகுதி உலா மேற்கொண்ட திரு ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணிக்கு அமைச்சர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் டாக்டர் டான் செங் போக் தலைமையிலான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதால் ஊழியர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் பின்னடைவு ஏற்படக்கூடும் என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
“நீங்கள் என்ன செய்யப்போகிறீரர்கள் என்று வாக்காளர்களுக்குத் துல்லியமாக தெரிவிப்பது முக்கியம். அதுதான் நல்ல நிர்வாகத்துக்கு அழகு.
“சவால்மிக்க முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனாலும் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்.
இரண்டு அமைச்சர்களைக் கொண்ட மக்கள் செயல் கட்சி அணிக்கு வாக்களிப்பதா அல்லது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக்கைக் கொண்ட எதிர்க்கட்சி அணிக்கு வாக்களிப்பதா என்பது குறித்து வாக்காளர்களிடையே குழப்பம் நிலவுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஈஸ்வரன் பதிலளித்தார்.
“இந்தக் கோணத்திலிருந்து பார்ப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். அவ்வாறு செய்தால் தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுப்
பதுபோல ஆகிவிடும்.
“போட்டியிடும் கட்சிகளால் தொகுதிக்கு கிடைக்கக்கூடிய பலன்களை ஆராய்ந்து பார்த்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.