ஆபத்தும் கலக்கமும் நிறைந்த தறுவாயில் சிங்கப்பூர் இருக்கையில், கொவிட்-19 நெருக்கடி என்ற ஒன்றே இல்லாததுபோல் எதிர்க்கட்சிகள் பேசுவதாக பிரதமர் லீ சியன் லூங் இன்று கூறினார். நாடு அதன் பழைய வழக்கத்தையே வைத்துக்கொள்ளலாம் என்ற போக்கையும் அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றார் அவர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் நாடே ‘ஒரு தலைமுறைக்கான நெருக்கடியை’ச் சந்தித்து வருகிறது. இருப்பினும் இதை அறிந்ததற்கான அடையாளமே எதிர்க்கட்சிகளிடம் தெரியவில்லை என்று அவர் விவரித்தார்.
கொவிட்-19 சூழலை அரசாங்கம் கையாண்ட விதத்தை அண்மைய நாட்களில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஆனால் அவை எவ்வாறு இந்தக் கிருமித்தொற்று சூழலைச் சமாளிக்கும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை என்று நேற்று நடைபெற்ற பகல்நேர ஃபுல்லர்ட்டன் தேர்தல் பிரசாரத்தின்போது திரு லீ குறிப்பிட்டார்.
“கொவிட்-19ஐ எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றி கடந்த ஆறுமாதக் காலத்திலும் இந்தத் தேர்தல் பிரசாரக் காலத்திலும் எதிர்க்கட்சிகள் எதுவுமே கூறவில்லை. இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இவர்களிடமிருந்து எத்தகைய பங்களிப்பு இருக்கும்? இவர்கள் அரசாங்கம் அமைத்தால் சிங்கப்பூரின் கதி என்ன?” என்று வினவினார்.
கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் சமாளித்ததன் முழு விவரங்களையும் அவர் அளித்தார். திறன்மிக்க அமைச்சர்களின் அணுக்கமான செயல்பாட்டின்றி கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது என்றார் திரு லீ. இருப்பினும், மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று எச்சரித்த பிரதமர் லீ, இன்னமும் கிருமியால் அபாயம் உள்ளது என்றும் சிங்கப்பூரர்கள் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் சுட்டினார்.
கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னர் தக்க சமயத்தில் அரசாங்கம் செயல்பட்டதாக கூறிய அவர், இது கடும் முயற்சிகளாலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாலும் சாத்தியமானது என்றார்.
“இனிவரும் சிரமமான நாட்களை நீங்கள் எதிர்கொள்ள உதவுவதற்கு யாரை நீங்கள் நம்புகிறீர்கள்- அதைப் பற்றியது இந்தத் தேர்தல்,” என்றார் பிரதமர் லீ.