பாட்டாளிக் கட்சியின் வேட்பாள ரான ரயீசா கான், ஃபேஸ்புக்கில் தாம் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். இனவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்த முறையற்ற கருத்தை அவர் இருமுறை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக சட்ட அமலாக்க அதிகாரிகள் பாகுபாடு மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும் அவரது கருத்து பிரதிபலித்தது. இதன் தொடர்பில் அவருக்கு எதிராக இரு போலிஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஞாயிறு இரவு செய்தியாளர்களிடம் பேசிய 26 வயது ரயீசா கான், சமுகப் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கருத்தை வெளியிடவில்லை என்றார்.
அதே சமயத்தில் சிறுபான்மையினரின் அக்கறைக்குரிய விவகாரங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே தாம் விரும்பியதாக அவர் சொன்னார்.
“என்னுடைய கருத்து எந்தவொரு இனத்தையும் சமூகத்தையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவுகளை வெளியிட்டதற்காக வருந்துகிறேன். இதற்கான விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். போலிஸ் விசாரணை நடத்தினால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்,” என்று ரயீசா கான் சொன்னார்.
செய்தியாளர் கூட்டத்தின்போது பாட்டாளிக் கட்சியின் தலைவர்கள் பிரித்தம் சிங், சில்வியா லிம் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த வேட்பாளர்களும் அவருடன் இருந்தனர்.
ரயீசா கான் வேட்பாளராகப் போட்டியிடுவதை இந்த விவகாரம் பாதிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த பிரித்தம் சிங், அவர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றார்.
இந்த விவகாரத்தில் தற்போது கருத்துக் கூற முடியாது. செங்காங்கில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களை தாமும் திருவாட்டி லிம்மும் தொடர்ந்து ஆதரிப்போம் என்று அவர் கூறினார்.
“ரயீசா கானின் ஃபேஸ்புக் பதிவு குறித்து முன்கூட்டியே தெரியாது. அவர் பாட்டாளிக் கட்சியின் மிக இளைய வேட்பாளர். சமூக ஊடகம் முழுமையாக வளர்ச்சியடைந்த தலைமுறையைச் சேர்ந்தவர். எங்களுடைய வேட்பாளர்கள் கடந்த காலத்தை மூடி மறைக்க முயற்சி செய்தால் எனக்கு ஏமாற்றமே ஏற்படும்.
“பொதுமக்களிடம் நேர்மையுடன் இருப்பது அவசியம். தேவையற்ற கருத்துகளையோ பதிவுகளையோ வெளியிட்டால் அதற்கு அவர்களே விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று பிரித்தம் சிங் தெரிவித்தார்.
செல்வி ரயீசா கானின் சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான இரு பதிவுகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
அவற்றில் ஒரு பதிவு, கடந்த மே 17ஆம் தேதி ராபர்ட்சன் கீயில் ஏழு வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாத சம்பவம் தொடர்பானது.
மற்றொரு பதிவு, சிட்டி ஹார்வஸ்ட் தேவாலயத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டியிருந்தது.
இந்த இரு சம்பவங்களிலும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பாகுபாடு மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாக செல்வி ரயீசா கானின் பதிவு கூறுகிறது.
இதற்கிடையே செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் செல்வி ரயீசா கானின் ஃபேஸ்புக் பதிவில் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று மக்கள் செயல் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
“சீனர்களையும் கிறிஸ்துவர் களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதை செல்வி ரயீசா கானே ஒப்புக் கொண்டுள்ளார்.
“அப்படியிருக்கும் பட்சத்தில் அவரை ஏன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏற்றவர் என்று பாட்டாளிக் கட்சி கருதுகிறது.
“இது ஒரு மோசமான விவகாரம். மேலும் சிங்கப்பூர் நிர்மாணிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளையே அவரது கருத்து குறை கூறுகிறது. “பாட்டாளிக் கட்சி தனது நிலையை விளக்க வேண்டும்,” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் மக்கள் செயல் கட்சி கேட்டுள்ளது.