ப. பாலசுப்பிரமணியம்
மூத்த எதிர்க்கட்சி தலைவரான திரு சியாம் சீ தோங்கின் கோட்டையாக 1984லிருந்து பொத்தோங் பாசிர் தொகுதி இருந்தது.
ஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல்களில் மக்கள் செயல் கட்சி யின் சித்தோ யீ பின்னுக்கு பொறுப்பு கைமாற, வரும் தேர்தலில் அத்தனித் தொகுதியை அவரிடமிருந்து கைப்பற்ற பாடுபட்டு வருகிறார் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் (சிமக) தலைவர் திரு ஹோசே ரேமண்ட்.
இவர் அரசியலில் இடம்பெறு
வதற்கு சிமகவின் முன்னாள் தலைமைச் செயலாளரான திரு சியாம் சீ தோங் ஒரு மூலக் காரணம்.
1980களில் திரு ஹோசேயின் தந்தை, திரு சியாம் சீ தோங்கிற்கு தேர்தல் சமயத்தில் தொண்டு செய்ய தம்மையும் அழைத்துச் சென்றதை ஹோசே நினைவுகூர்ந்தார்.
1990ல் நிதி நெருக்கடியால், சிறிய வீட்டுக்கு இடம்மாற வேண்டிய கட்டாயம் திரு ஹோசேயின் குடும்பத்தினருக்கு ஏற்பட, அவ்வீட்டிற்கான வைப்புத் தொகையை திரு சியாம் உடனடியாக கொடுத்ததாக திரு ஹோசே தெரிவித்தார்.
“என் குடும்பத்தினர் வசிப்பதற்கு ஓர் இடம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் திரு சியாமின் உதவி அமைந்தது. அந்த நன்றிக்கடனை செலுத்தும் வகையில் பிறருக்கு உதவ முன்வர வேண்டும் என்ற உத்வேகம் என்னில் பிறந்தது,” எனக் கூறினார் 48 வயது திரு ஹோசே. 2017ல் தமது கட்சிக்கு உதவ, திருமதி சியாமின் துணைவியாரிடமிருந்து அழைப்பு வந்ததும், களத்தில் இறங்கினார் திரு ஹோசே.
கடந்த 3 ஆண்டுகளாக தொகுதியின் குடியிருப்பாளர்களைச் சந்தித்து, வாழ்க்கைச் செலவினம், வேலை வாய்ப்புகள் குறித்த
அக்கறைகளை தெரிந்துகொண்டதாக குறிப்பிட்டார்.
திரு ஹோசே சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்.
ஊடகத் துறையிலும் பொதுச் சேவை துறையிலும் பணியாற்றிய அனுபவமும் திரு ஹோசேவுக்கு உள்ளது.