சொந்தக் காலில் நிற்பதிலும் பிறருடன் இணைவதிலும் முதியோர் சவால்களை எதிர்நோக்குவதாகக் கூறும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஜோன் செங் சிம் பெரேரா, கிருமிப்பரவல் தொடரும் இந்நேரத்தில் எவரும் உதவியின்றித் தவிக்காமல் அவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் எனத் தெரிவித்திருக்கிறார்.
" முதியோர் எதிர்நோக்கும் சவால்களை இளையர்கள் பலர் மறந்துவிடுகின்றனர். கொவிட்-19 காலக்கட்டத்தில் முதியோருடன் தொடர்பில் இருந்து அவர்களது நலனைப் பேணிக் காப்பது கடினம். இவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆதரவு நிச்சயம் தொடர வேண்டும்," என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் போட்டியிடும் அவர் கூறினார்.
ஆங்கிலம் தெரியாத தமிழ், மலாய் மற்றும் மாண்டரின் பேசும் முதியோரின் தேவைகளை மிகுந்த ஆர்வம் மிக்க தொண்டூழியர்கள் மூலம் அறிவதாகக் கூறுகிறார் திருவாட்டி பெரேரா. "சமூகப் பங்காளிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். முக்கிய பத்திரங்களை அவர்களுக்காகப் படித்துக் காட்டுவது உள்ளிட்ட உதவிகளை அளித்து அவர்களை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம். இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காகவும் அவர்களை மகிழ்விப்பதற்காகவும் பல்வேறு சுற்றுலாக்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்," என்று கூறினார்.
முதியோர் அதிகம் வசிக்கும் தமது ஹென்டர்சன்-டாவ்சன் (Henderson- Dawson) தொகுதியிலுள்ள மேம்பாலங்கள் சிலவற்றில் மின்தூக்கிகளையும் கூரைவெய்ந்த நடைபாதைகளையும் அமைக்கப் பாடுபட்டதாகக் குறிப்பிட்டார். தமது தொகுதியில் மக்கள் செயல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் முதியோருக்கான தொழில்நுட்ப வசதிகள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்றும் வயது, மொழி வேறுபாடுகளால் எவரும் பின்தங்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.