கொவிட்-19 கிருமித்தொற்று ஆபத்து இன்னும் நீங்காதபோதிலும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் பாலன் தம்பையா குறைகூறியுள்ளார்.
இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழக்கத்துக்கு மாறான சூழ்நிலையில் பிரசாரம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஃபாஜார் கடைத்தொகுதியில் இன்று தொகுதி உலா மேற்கொண்டபோது செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இருப்பினும், தமது கட்சி மிகவும் சிறப்பான முறையில் பிரசாரம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பிரசாரக்கூட்டங்களை நடத்த முடியவில்லை, கட்சியினர் பலருடன் தொகுதி உலா மேற்கொள்ள முடியவில்லை. முகக்கவசம் அணிந்துகொண்டுதான் தொகுதிவாசிகளிடம் பேச வேண்டி இருந்தது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடு, திட்டங்கள் ஆகியவற்றை வாக்காளர்களுக்குத் தெரிவிக்க இணையம் வழி பிரசாரங்களை நடத்தியதாக அவர் கூறினார்.
இருப்பினும், பெரும்பாலான வாக்காளர்கள் தமது கட்சியின் இணையம் வழி பிரசாரத்தை பார்த்திருக்கமாட்டார்கள் என்றார் டாக்டர் தம்பையா.
“எனவே, இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை ,” என்றார் அவர்.