சிங்கப்பூரர்களில் தற்போது சிலருக்கு ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரச்சினைக்கு கொரோனா நோய்ப்பரவல் மட்டும் காரணமல்ல என்று கருதுகிறார் மக்கள் குரல் கட்சி வேட்பாளரான 31 வயது பிரபு ராமச்சந்திரன்.
பெரும் வர்த்தக நிறுவனங்களில் அரசாங்க ஈடுபாடு இருக்கக்கூடாது என்றும் தடையற்ற சந்தை அமைப்பைக் கொண்ட பொருளியலே இதற்குத் தீர்வு என்றும் அவர் கருதுகிறார்.
“சிங்கப்பூருக்கு வேலை வாய்ப்புகளும் அதற்கு உறுதி செய்யும் வளங்களை ஒதுக்குவதும் முக்கியம்,” என்கிறார் நிதித்துறை நிர்வாகியாகப் பணியாற்றும் திரு பிரபு.
தமிழையோ பிற மொழிகளையோ வளர்ப்பது அவரவர் தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது என்றும் தமிழைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமையாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
பிரனாக்கான் இன குடும்பத்தைச் சேர்ந்த திரு பிரபு, நேற்று (ஜூலை 7) தொகுதி உலா மேற்கொண்டபோது சிங்கப்பூரில் நான்கு மொழிகளிலும் பேசி காப்பிக் கடைகளில் அமர்ந்திருந்த பொதுமக்களுடன் உரையாடியதாகக் குறிப்பிட்டார்.
இந்தியர் விவகாரம் குறித்து கருத்துரைத்த அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் திரு சிவகுமரன் செல்லப்பா, 57, இந்தியச் சமூகத்தின் ஒருசாராரைப் பாதிக்கும் வசதி குறைபாடு, கல்வி தகுதி போன்ற பிரச்சினைகள் சமூகத்தில் தேசிய அளவில் நிலவும் பிரச்சினைகளே என்றார்.
“ஆயினும், இந்தியச் சமூக நடவடிக்கைகளும் தமிழ் மொழி வளர்க்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றார் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிடும் திரு சிவகுமரன். தற்போது தமிழ் மொழி பயன்பாட்டில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கருதுகிறார்.
இது தவிர நாட்டின் குடிநுழைவு கொள்கைகள் கவலை அளிக்கின்றன என்ற அவர் சிங்கப்பூரில் வெளிநாட்டுத் திறனாளர்களுக்குக் கூடுதல் அனுகூலங்கள் கிடைக்கின்றன என்று குறைகூறினார்.
“நாட்டின் பொருளியல் வளர்ச்சியின் பலன் யாருக்குப் போய் சேருகிறது என்ற கேள்வி எப்போதுமே எழுப்பப்படவேண்டும். அதனை அறிந்துகொள்ள அரசாங்கம் தவறிவிட்டது,” என்று அவர் சாடினார்.