தமது கட்சி ஆர்வலர்களுடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இடம்பெற்ற தம் குரல் பதிவுகள் இப்போது கெட்ட நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா தனது இணையத்தளத்தில் திரு சானின் குரல் பதிவுகளை நேற்று வெளியிட்ட பிறகு, திரு சான் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்கான விளக்கத்தை அளித்தார்.
அந்தக் கலந்துரையாடலில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஒரு நெருக்கடிநிலை கட்சிக்குள் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பது பற்றி திரு சான் பேசியிருந்தது அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தது. தன்னுடைய குரல் பதிவுகள் மாற்றங்கள் செய்யப்பட்டு கெட்ட நோக்கத்துடன் அவை தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்று திரு சான் கூறினார்.
“மக்கள் செயல் கட்சிக்கு வாக்குகள் கிடைப்பதில் பிரச்சினையாக இருக்கும். பின்னர் ஒரு நெருக்கடி வந்து எங்களுக்கு கைகொடுக்கும். அதன் பிறகு மீண்டும் வாக்குகள் குறைய ஆரம்பிக்கும்.
“உதாரணத்துக்கு, 2001ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் எங்களைக் காப்பாற்றியது. அதேபோல் 2015ஆம் ஆண்டு அமரர் லீ குவான் இயூவின் மறைவு எங்களுக்குக் கைகொடுத்தது. எப்போதும் ஒரு நெருக்கடி வந்து நம்மை காப்பாற்றும் என்று மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று கட்சி ஆர்வலர்களிடம் நான் அந்தக் கலந்துரையாடலில் பேசியிருந்தேன்.
“வரலாற்றுபூர்வமாக ஒரு நெருக்கடி காலத்தில் அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், தரநிலையைக் கட்டிக்காப்பதற்கும் நிலைத்தன்மைக்கும் நாம் போராட வேண்டியிருக்கும் என்றும் திரு சான் சொன்னார்.
பகிரப்படும் அந்தக் காணொளியில் இடம்பெற்ற மற்ற இரு பகுதிகள் குறித்தும் விளக்கம் அளித்த திரு சான், சிங்கப்பூரர்கள் எந்த அர்த்தத்தில் அவை சொல்லப்பட்டன என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.