இந்த ஒன்பது நாட்களில் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து மக்கள் செயல் கட்சி உதவி வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் வேட்பாளர்களை எவரும் மதிக்கமாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக மசெக ஆற்றிய பணிகளை மக்கள் நிச்சயம் மதிப்பிடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நீ சூன் குழுத்தொகுதிக்குத் தலைமை தாங்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளரான திரு சண்முகம் நேற்றுக் காலையில் மக்களைச் சந்தித்தபோது, தமிழ் முரசிடம் பேசினார்.
“மக்களின் இன்றைய முக்கிய கவலை கொவிட்-19 நெருக்கடி யிலிருந்து சிங்கப்பூர் எப்படி மீட்சிபெறும் என்பதே,” என்றார் அவர்.
இதில் உலகில் 11 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் இதனைக் கடந்து வர உதவப்போவது யார், உயிர்களைக் காப்பது எப்படி என்பது முதல் கேள்வி.
இரண்டாவது கேள்வி, கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீட்டெடுக்கும் திட்டங்கள் என்ன, பல நிறுவனங்களும் வேலைகளும் அபாயத்தில் உள்ளன. இந்த நிலையில் நம்மை வழிநடத்தப்போவது யார் என்பதுதான் என்றார் திரு சண்முகம்.
நீ சூன் வட்டாரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நீ சூன் தற்போது துடிப்புமிக்க நகரமாக மாறியுள்ளது என்றார்.
“சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியினர் (சிமுக), தனது வெற்றிக்குப் பிறகுதான் திட்டங்களைப் பற்றி விவரிக்கும் என்று கூறியுள்ளதைக் கேள்விப்பட்டேன்.
“இதிலிருந்து அக்கட்சி வேட்பாளர் திரு பிரேட் போயர் கூறிய ஒரு திட்டம் ஒன்றைத் தவிர, அவர்களுக்கு வேறெந்தத் திட்டமும் இல்லை எனத் தெரிகிறது.
“அதிக சிங்கப்பூரர்களைத் துப்புரவுப் பணியாளர்களாக நகர மன்றம் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பது அவரது திட்டம். சிங்கப்பூரர்கள் இதைவிட நல்ல திட்டங்களுக்குத் தகுதியானவர்கள் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.
“தங்களுக்குத் திட்டங்கள் இல்லை என்பதால், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் முக்கியமில்லை என்கிறார்கள். நீ சூன் மக்களிடமே சொல்லட்டும், உள்கட்டமைப்பு முக்கியம் இல்லை என்று,” திரு சண்முகம் கூறினார்.