மக்கள் செயல் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சான் சுன் சிங்
முரண்பட்ட மனிதவளக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மாற்றும் எண்ணத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அடிபோடுவது போன்றவை சிங்கப்பூர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அப்படிச் செய்வது, உலகம் தன்னைப்பேணித்தனத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் வேளையில், முதலீட்டாளர்களிடையே சிங்கப்பூருக்கு இருக்கும் ஈர்ப்புத்தன்மையை குலைத்துவிடும் என்று அமைச்சர் சான் எச்சரித்தார்.
மக்கள் செயல் கட்சியின் நேற்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய திரு சான், தற்போதைய நிலையில் உலக முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளதையும் சுட்டினார்.
“முதலீட்டாளர்கள் சிங்கப்பூரில் தொழில் தொடங்கி நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏதுவான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ஒன்பது நாள் தேர்தல் பிரசாரத்தின்போது சில எதிர்க்கட்சிகள், குறிப்பாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, இந்தியா-சிங்கப்பூருக்கு இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
அத்துடன், ‘எம்பிளாய்மண்ட் பாஸில்’ வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு விதிக்க வேண்டும் என்றும் எஸ் பாஸ், ‘ஒர்க் பர்மிட்’ அனுமதியில் இங்கு வேலை செய்து வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
“இந்தக் காலகட்டத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். உலகில் தன்னைப்பேணித்தனம் அதிகரித்து வரும் நிலையில், முன்னுக்குப் பின் முரணான மனிதவளக் கொள்கைகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்றவை சிங்கப்பூர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை குலைப்பதுடன் முதலீட்டாளர்களுக்கு சிங்கப்பூர் மீதுள்ள ஈர்ப்புத்தன்மையையும் அழித்துவிடும்,” என்று அவர் விளக்கினார்.
அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் சிங்கப்பூர் செய்ய வேண்டிய இரண்டு காரியங்களை திரு சான் பட்டியலிட்டார். முதலாவதாக, நடப்பிலிருக்கும் இருநாட்டு, பன்னாட்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை கடைப்பிடிப்பது. இதன்மூலம் சிங்கப்பூர் வெளிநாட்டுச் சந்தைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அடுத்ததாக, சிங்கப்பூர் நிலையான, கட்டுக்கோப்பான நீண்டகாலக் கொள்கைகளை வகுக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.