ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் தியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்வது வழக்கமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடாதபோதிலும் இணையம் வழி தியோச்சு கிளைமொழியில் அவர் பிரசாரம் செய்துள்ளார்.
“கொவிட்-19 காரணமாக இந்தத் தேர்தலில் பிரசாரக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. இதனால் இம்முறை பிரசாரக்கூட்டத்தில் தியோச்சு கிளைமொழியில் பிரசாரம் செய்ய முடிவில்லை,” என்றார் திரு லோ.
கொவிட்-19 ஆபத்து இன்னும் நீங்காத நிலையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். பாட்டாளிக் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறு வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார். தொகுதிவாசிகளுக்காக பாட்டாளிக் கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர். மக்கள் செயல் கட்சி அதன் விருப்பத்துக்கு ஏற்ப கொள்கைகளை அமைப்பதையும் விலைவாசிகளை உயர்த்துவதையும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.